திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று முருகானந்தம் என்பவர் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக கோவில் காவலாளிகள் சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் முருகானந்தத்தை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற முருகானந்தம் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை.அப்போது பணியில் இருந்த காவலர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் திவ்யா ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சமயபுரம் போலீசார் கூறுகையில் ..
விசாரணை கைது முருகானந்தம் காவல் நிலைய கழிவறையில் அவரது இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட முருகானந்தம் மது போதைக்கு அடிமையானவர். கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த வருடம் இவரது தாயை அடித்து கொலை செய்த வழக்கு அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.